அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் இன்னயாவினும் புண்ணியங்கோடி ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல் – பாரதி-

Wednesday 11 May 2011

புதையல்



ஊர் அடங்கி நிலைமை மோசமாகி போய்விட்டது.

கொடுமைக்காரனின் ஊர்திகள் என்னை நசித்துக் கொன்று விடுமாப் போலத்தான் ஓடிக்கொண்டிக்கின்றன.
இந்தக் கிராமத்தின் வளம் கொழித்த காலமொன்று இருந்தது.விவசாயம் செய்து தங்களின் விடாமுயற்சியால் ஒவ்வொரு குடிமகனும் ஓலைக்குடிசையிலிருந்து
ஓட்டுவீடும், அமெரிக்கன் பற்றேணில் கல்வீடும் கட்டி, களித்திருந்தபொழுது......

                                                      ஐயோ!நான் சொல்லுற விதத்திலை கிராமத்தின்ரை உண்மை எழில் உங்களுக்கு விளங்காது. இந்த மக்களின் வாழ்வு புரியாது.போங்கோ! போய், எழுத்தாளர் தாமரைச்செல்வியின் “பச்சை வயல் கனவு”எண்டகதையைப் படிச்சுப் பாருங்கோ!
தள்ளி நில்லுமன்! ஊரு தின்ன வருவாரின்ரை ஊர்திகள் பூநகரிப்பக்கம் போகப் போகுது. உங்களையும் தான் உழக்கிக்கொண்டு போகலாம். என்னையும்தான் உழக்கிக்கொண்டு போவாங்கள்.அது உண்மை.  இந்தக் கிராமமும் இந்தக் கிறவல் ரோட்டும் ஏன் இப்படிக் கிடக்குது தெரியுமே?

இவங்கள் சாள்ஸ்,நாதன், ராஜா, வேந்தன், ரவி,  கோவிந்தப்பாவின்ர மகன், தங்கரசா,படியலிஙகம், சுட்டுக்கொன்றாங்களே வளாகத்துப் பொடியன் சத்தியசீலன், எல்லோருமாய்ச் சேர்ந்து அதோ அந்த மைதானத்தை திருத்தித் தரச்சொல்லி -- அதுதான் எங்கிட விரல் எல்லாம் எரிய எரிய தேசிக்காய் போட்டுரஞ்சி, தேர்தல் மையைக் கழுவி கள்ள் வோட்டுப் போட்டு பார்ளிமேந்துக்குஅனுப்பிவைத்தோமே சுங்கரி-- அவரிட்டை இந்த மைதானத்தை திருத்தித் தாங்களேன் எண்டுகேட்டதுதான் ..........உடனே கோபம் வந்துட்டுதே எம். பிக்கு!
“நீங்கள் எல்லாரும் ஆர்? எந்த கிராமம் எண்டே தெரியாது” எண்டு சொல்லிப் போட்டார்.
படிச்சவங்கள் அறிவுள்ள பிள்ளைகள் தங்களின்ரை முழுமுயற்சியாலே
“சிறிதாய் வளரும் சின்னக் கிராமம் சிந்திக்க வைப்போம். அது  எங்கள் இதயம்
எண்டு எழுதிப்போட்டு அதை செய்தும் காட்டினாங்கள். ஆனால் அவங்களும் எங்கோ தூர தேசம் போய்விட்டாங்கள். அது கொடுமையான கதை.

ஆ! அடிச்சதா? பார்த்தீங்களா? நான் சொன்னேன் பார்த்திட்டுப் போங்கோ எண்டு! எதுக்கும் என்னைத்தான் கோவிப்பீங்கள்.
இப்பிடி எத்தினைபேர் என்னிலை உரஞ்சிப் போட்டு நாசமாய்ப்போன கல்லு எண்டு திட்டிப் போட்டுப் போகினம்.

இவ்வளவு காலத்துக்கும், முழுவெறியிலகூட, என்னில முட்டாமலே நடந்து போன ஆட்கள் ஆக மூன்று பேர் தான்.
1.  ஒண்டு அவர் ஐயம்பிள்ளை மாஸ்ரர், (அதுதான் வாசனுடைய தகப்பன்)
இயக்கதிலை இருந்த போது ஆமி அடையாள அட்டையைக் காட்டச்சொல்ல அவர் தன்ர அடையாள அட்டைக்குப் பதிலாய் கராட்டிக் காட்டைக் காட்டி ஆமியிடம் அம்பிட்டவர்.

2. மற்றது, தலையை ஆட்டியாட்டி “தெரி தெரி, தெரி தெரி, கண் தெரியாதேடா! சுண்ணாகத்துக் கோவியரே?’’ எண்டு றோட்டாலே சத்தம் போட்டுக் கொண்டு நடக்கிற கிழவன்.

3.மூன்றாவது, பெரியதம்பி எண்டு , கண்டாவளைப் பொடியன். அவன் படிச்சவன் ஆனால் மூளை சுகமில்லாதவன்.

இவன் செயக்குமார் குடிச்சுப் போட்டு வந்து தானாக எனக்கு மேலே விழுந்து கீறுப்பட்ட காயத்தைக் காட்டி, ஆமி அடிச்சது புலிகள் பிடிச்சது, அதனால இலங்கையில வாழமுடியாது எண்டு சொல்லித்தான் டென்மார்க்கில அகதி அந்த்தஸ்த்துக் கேட்டவன். எண்டு ஆரோ பேசிக் கொண்டினமாம்.

பார்த்து நடக்கிற ஆட்கள், கண்ணிருக்கிறவை, நிதானமாய்ப் போறவை, இவைகூடஎன்னிலை உரஞ்சிப்போட்டு, கல்லு எண்டு என்னை ஏசி, மேலும் ஒருக்காய் எனக்கு உதைஞ்சு போட்டுப்போவினம்.

எனக்குள்ளையும் எத்தனை வேதனைகள், மனவுளைச்சல்கள்,ஆசைகள், கனவுகள்,.....ம்....... எல்லாம் நிலைச்சுவிட வேணும் எண்ட நம்பிக்கைதான்.

முந்தி,இளைஞர்வட்டப் பொடியள் கூடியிருந்து கதைச்ச இடமும் இதுதான். பரந்தன் சந்தியிலையிருந்த இராணுவமுகாமை உளவுபார்த்த புலி வட்டனுகள்
மறைவாய் என்னிலை குந்தியிருந்தவங்கள்தானே!இப்படி இருக்கிற பொழுது,ஒருநாள் அந்த ஆமிக்காரன் வந்து புள்டோசராலை என்னைக் கிளப்ப ப்பார்த்தானே. ஐயோ... எனக்கு மனம் பதறிப் போச்சு ஆனால் அவன்ரை கப்டன் வந்து தடுத்துப் போட்டான். அந்தத் தடுப்புத்தான்....... புலிகள் என்னை ஒரு தடுப்பாகப் பாவிக்க வாய்ப்பாகப் போச்சுது.
அப்ப, புல்லானாலும் புலிக்கு ஆயுதமாகும் எண்டு சொன்னது சரிதானே!

        ஆ!பரந்தன் இராணுவமுகாமைப் பொடியள் அடிச்சுத்தரைமட்டுமாக்கியபோது நீங்கள் பார்த்திருக்க வேணுமே! அப்பா! எத்தினை பொடியன்கள் என்னிலை தங்கடை உடம்பை உரஞ்சிக்கொண்டு  போனவங்கள்! உண்மையிலை கல்லாய் இருந்தாலும் எனக்கிந்த தவப்பேறு கிடைத்தது. நான் அனுபவித்தது எப்பவெண்டால் அந்த வீர மறவரின்ர உடல் என்னில உரசிக் கொண்டு தவழ்ந்து போனதுதான்.அதுவே நான் செய்த தவம்.

புகைபுகையாய் வந்தார்கள், படைபடையாய் வந்தார்கள் எண்டெல்லாம் ஆமிக்காரர் அறிக்கை விட்டாங்களே!

கற்பனையில்லை கரும்புலி யாகம்!
கவிதையில் நானும் பாடிட
விற்பனைக்கில்லா இந்தப்பூக்கள்
உயிர்த்தேன் தந்தே தமிழ்த்தேன் காக்கும்”

எண்டு ஒரு வழிக்கிறுக்கன் பாடினானே. நினைவிருக்கிறதா?

அல்லும் பகலும் வெறும் கல்லாய் இருந்து விட்டு
அதிட்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்.
எண்டு ஒரு பாட்டு நடராசாவின்ர கடை ரேடியோவிலை கேட்கும்.

சில வேளைகளில சைக்கிள்கடைப் பசுபதி வேலை முடிந்து போகிறபோதுபாடிக்கொண்டு போவார். எவனை நினைச்சுப் பாடினாரோ ஆருக்குத்தெரியும்!.

வடிவாய்க் கேளுங்கோ! என்ர காலடியில பெரியதொரு புதையல் கிடக்குது. கிட்டத்தட்ட 250 ஆண்டுகளுக்கு முந்திஎண்டு சொல்லலாம்.

All of you Gentlemen. listen!
pandaara Vanni is a very strong king
our shoulders are  not enough to round  him up
open that rock, and put that golden ball under.
m....m.....oh God.....Run away.
follow me..............


எண்டு சொல்லிக் கொண்டு அண்டைக்கு அந்தவெள்ளையன்கள் ஒரு புதயலை என்ர காலடியில வைச்சபோது பண்டாரவன்னியனின்ர படைகள் அவங்களை விரட்டிக்கொண்டு போய்விட்டினம்.


அன்றிலிருந்து இன்றுவரை நான் அதைப் பார்த்துக் கொண்டு வாறேன்.


ஒரு நாள் ஐயம்பிள்ளை வாத்தியார் குடிக்காமல் நிதானமாகப் பேசியபோது தன்ர காலால என்னை உரஞ்சிப் போட்டு போட்டார். உடனே அவருக்குக் கோபம் வந்திட்டுது.அதனாலை ரியூசன் மாஸ்ரர் சார்ள்ஸ் 
குணரத்தினத்திட்டைச் சொல்லி அவற்றை மாணவப் பொடியளைக் கொண்டு என்னை கிளப்ப முற்பட்டினம்.


எனக்கெண்டால் சந்தோசம் தான். இந்தப் பொடியள் இந்தப் புதயலை எடுத்தால் இந்தக் கிராமமும் முன்னேறும். பொடியளுக்கும் கொஞ்சம் நனையும் என்று நினைத்துச் சந்தோசப் பட்டேன்.ஆனால் அதற்குள்ள பாட்டுக் காரப் பாகவதர் வந்து தடுத்துப் போட்டார்.இது எனக்குப் பெரிய கவலை பாருங்கோ. இவ்வளவு காலமும்பாதுகாத்துக் கொண்டு வந்த புதையலை ஒருவராவது எடுப்பதாக இல்லை .  


நாட்டிலை புலிகளின்ர போர் நிறுத்தம் வந்தபின்னாலே,உலகவரைபடதிலை வன்னிப்பிரதேசம் ஊன்றிப் பார்க்கப்படுகுது.எல்லா நாட்டவர்களும் வந்து பார்க்கினம். இப்படித்தான் அண்டைக்கு வந்த வெள்ளையன் ஒருத்தன், கையிலை ஒரு வரைபடத்தை வைச்சுக்கொண்டு, பூநகரிவீதி முனையில நிண்டுகொண்டு எதையோ பார்க்கிறான்.அந்த மனிதனைப் பார்த்தால், ஆரும் ஒல்லாந்தனோஅல்லது ஆரோ ஆங்கிலேயன்ர உறவுக்காரனுடைய தாத்தா பாட்டனோதான் இந்த வரைபடத்தை இவனுக்குக் குடுத்திருக்கவேணும் வடிவாகவிளக்கமும் சொல்லியிருப்பார் போலயிருக்குது. 
அய்யையோ !இந்தச் சங்கதி தெரியாமல் இந்தப் புலிப் பொடியளும் அவனைக்கு வழிகாட்டுறாங்களே! நான் எப்ப்டி இதை அவங்களுக்கு விளங்கப்படுத்துவேன்.?
பண்டாரவன்னியன் காலத்துப் புதையலை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஆரும் பயன்படுத்தாமல் நான் பாதுகாத்து வைத்திருந்திருக்கிறேன்.
இந்தப் புதையலை.இரண்டு பரம்பரைச் சகாப்தத்துக்குப் பிறகும்,  இந்தப் புதையல் வெள்ளைக்காரன்ர கைக்குத்தான் போய் விடுமோ?! அதுதான் பயமாயிருக்குது.


அல்லது அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்துவிட்டு அதிஸ்ரம் இல்லை என்று அலட்டிக்கொண்ட்டார்.
எண்ட பாடலிலை சொன்னதுபோலத்தான் ஆகிவிடுமோ?


ஆமிக்காரங்களை அடித்து வன்னி மண்ணை விட்டு அகற்றிய பின்னர் என் மனம் ஆறியிருந்த்தது உண்மை. ஒரு நாள் இந்தப் பொடியள் றோட்டைத்திருத்துவாங்கள்.அந்த நேரம் என்னைக் கிளப்பி எடுக்கிறபொழுது
புதையலும் வெளிப்படும். அதை வைத்து இந்த சின்ன சிவன் கோயிலையும் புதுப்பிச்சுக் கட்டி, மைதானத்தையும்,அந்த வாசிகசாலையையும் திருத்தி, புனரமைப்பாங்கள் எண்டு நினைச்சிருந்தேன்.


ஆனால் இப்ப எல்லாம் கலைஞ்சுபோய் கனவாய்ப் போய்விடும் போலிருக்கிறது. இப்படி நான் தனியாய்க் கிடந்து தவிக்க இந்த வெள்ளைக் காரர்தான் காரணம்.உண்மையாய் வெள்ளைக் காரர்கள் நல்லது செய்வாங்களாம்.அவங்கள் இங்கிருந்து சுரண்டிக் கொண்டு போனதை இண்டைக்கு எங்கடை தமிழ் அகதிகளுக்கு அங்கை தஞ்சங் கொடுத்து வாழ வைக்கிறாங்கள். இது ஒரு வகையில பார்த்தால் , ஈடு செய்யும் பணி எண்டுதான் சொல்ல வேண்டும். ..... அப்படியென்றால், இந்தப் புதையலை என்ன செய்யிறது? அதுக்காக, இதை வெள்ளைக்காரர் எடுக்க அனுமதிக்கலாமோ?


வெள்ளைக் காரர் போட்ட றோட்டும், அவங்கள் வரைந்த வரைபடத்துடனும் தானே இந்த மண் இப்படியே கிடக்குது!.


கடவுளே எல்லாம் நல்லபடியாய் நடக்கவேணும்..................


ஆர் இது? என்ன?, புது முகமாய் இருக்குது?. இல்லை இல்லை இந்தப் பொடியனை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்குது. அடடா!.... இது எங்கட கிராமத்துப் பொடியன்தான்.... எனக்குத் தெரியும், இவன் ... இவன், ஆயப்புக் கிழவன்ரை பேரனெல்லோ.!அதுதான் பாத்தேன். இவன் கலியாணமும் கட்டி, பிள்ளைளும் இருக்கினம்
அவன் கொண்டுவந்த பெட்டியிலை என்ன எழுதியிருக்கு? அவுஸ்ரேலியா என்று எழுதியிருக்கிறது.
ஆனல்,இவன் ஏன் பூநகரி றோட்டையும்,மற்றப் புழுதி றோட்டையும்  அண்டைக்கு வந்த வெள்ளைக்காரன் பார்த்த மாதிரி நிண்டு உன்னிப்பாய்ப் பார்க்கிறான்.?
பெண்சாதியோட வாறான். கிட்ட வாறான்.எனக்குக் கிட்டவாய் வந்து நிண்டு என்னைக் காட்டி எதையோ சொன்னவன், பிறகு தன்ரை சப்பாத்தைக் கழற்றிப் போட்டு  பெண்சாதிக்கு தன்ரை கால்நடு விரலையும் காட்டுறான்.ஏதோ கதைக்கினம்..... கேட்பம்...
“இங்கை, உசானி! இந்தக்கல்லாலதான் எனக்கு அவுஸ்ரேலியாவில் நிரந்தர விசா கிடைத்தது.இந்தக் கல் அடிச்சுத்தான் என்ர கால் நகம் கழன்று போனது. நான் என்ர கால் நகத்தை ஆமி பிடுங்கிப்போட்டான் எண்டு சொல்லித்தான் வழக்குப் போட்டு அவுஸ்ரேலியா விசா எடுத்தனான். 


அதுதான் இந்தக் கல்லைக் கிளப்பி இதில ஆஞ்சநேயர் சிலை ஒண்டு செய்து அவுஸ்ரேலியா மெல்பேணில் ஒரு கோயில் கட்டலாம் எண்டு யோசிக்கிறேன்.


என்ன சொல்லுறீங்க உங்களுக்கொரு நிரந்தர வாழ்க்கையை அமைக்க உதவின கல்லை தெய்வமாய் நினைத்து வழிபடுகிறது பெரிய விசயம் தானே.  அப்பக் கல்லைக் கிளப்புங்கோவன்.
அப்பாடா! இப்பதான் நின்மதி. அவன் சொன்னதைச் செய்து முடிக்கிறதுக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யிறான்.......


என்ர கனவும்,நினைவும், உண்மையாய் நடக்கப் போகிறது..... 
அப்பனே! ஆஞ்சனேயா! நீ வாழ்க!


அது சரி..... அப்படியெண்டால் ..... கீழே இருக்கிற புதையல்???....................  

25/03/2007  
  

0 comments:

Post a Comment